
சென்னை,
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'கண்ணப்பா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
'கண்ணப்பா' திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது, நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், " கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும், இது தான் நம்முடைய வழக்கம். அதன்படி, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விசயமே எங்களுக்கு தெரியாது. அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது.
அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். அப்போது கூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லை. போலீஸில் புகார் அளிக்கும் போது, அங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாக தான் செய்தியாக வெளியானது. பிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்ட போதுதான் வேறு வழியில்லை, எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. காரணம், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும், என்பது தான் என் ஆசை. அதற்காக தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். இது தான் இந்த பிரச்சனை.
'கண்ணப்பா' திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை கண்ணப்பா பற்றி வந்திருக்கும் படங்களை விட மிக வித்தியாசமான அதே சமயம் பிரமாண்டமான படமாக இருக்கும். குறிப்பாக கண்ணப்பா சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்து என்பதை தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கிறது. ஆனால், சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதை இந்த படத்தில் பார்க்கலாம். அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். நிச்சயம் இந்திய சினிமாவில் கண்ணப்பா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம், ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதை தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம். தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைக்க உள்ளார்கள், குறிப்பாக கண்ணப்பா தனது வாயில் தண்ணீர் எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, வட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள், என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படித்தானே இருக்கிறது, உண்மையை தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம், என்று வாதிட்டேன். இதைவிட பெரிய விசயம், காதல் பாடலை பார்த்துவிட்டு, கண்ணப்பா காதலித்தாரா? என்று கேட்கிறார்கள். சிவனும், பார்வதியும் காதலிக்காவில்லையா, அவர்களுக்கு இடையே இருக்கும் காதல் தான், கண்ணப்பாவிடமும் இருக்கிறது, என்று விளக்கம் அளித்தேன். இப்படி பல கேள்விகளை தணிக்கை குழுவினர் கேட்க இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி புரிய வைத்து படத்திற்கு சான்றிதழ் பெறப்போகிறேன், என்று தெரியவில்லை. அனைத்தையும் சிவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்காக எடுக்கப்பட்ட படம், நிச்சயம் அவர் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவார், என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.