கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் சஸ்பெண்ட்

6 hours ago 1

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர்.

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது.

இநிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரெயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைய் எடுத்துள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.

 

பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?

'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும்.

தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.

செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

இரு மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அதில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதன்படி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article