*அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கடலூர் : கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் குடிநீர் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் எதிரே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமார் 120 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த விடுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் குளிக்கும் நீரையே குடிக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையை எடுக்கப்படவில்லை என கூறியவர்கள், நேற்று காலை காலி குடங்கள் மற்றும் பக்கெட்டுகளுடன் கல்லூரி முன் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறுகையில், எங்களுக்கு குடிநீர் வசதி இல்லை. விடுதியில் உள்ள பட்டியல் படி உணவும் வழங்கப்படுவதில்லை. விடுதியும் பாழடைந்து உள்ளது. இதை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மறியலை கை விடுவோம் என்று கூறினர்.
இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் இன்றே (அதாவது நேற்று) விடுதியில் குடிநீருக்கான மோட்டார் அமைக்கப்படும். மற்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்ற மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
The post கடலூரில் பரபரப்பு கல்லூரி விடுதி மாணவர்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.