சென்னை: பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பல வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்; கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்தத் தீர்ப்பு இன்று வரை செயல்படுத்தப்படாத நிலையில், பட்டியலின மக்களில் கிரீமிலேயர் பிரிவினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் மாளவியா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.