
கன்னியாகுமரி,
அருமனை அருகே உள்ள ஆறுகாணியில் இருந்து தடம் எண் 86 அரசு பஸ் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் சுந்தர்ராஜ் ஓட்டி வந்தார். அதில் திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பலர் இருந்தனர்.
அந்த பஸ் பத்துகாணி சந்திப்பில் வந்த போது டிரைவர் சுந்தர்ராஜுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அதிகமாக வியர்த்து கொட்டியது. அத்துடன் அவரது கை, கால் தளர்ந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டரிடம் தன்னுடைய உடல் நல கோளாறு பற்றி தெரிவித்தார். இதுகுறித்து கண்டக்டர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை பத்துகாணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது டிரைவர் சுதாகரித்து கொண்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.