
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தீனதிரிஷா (வயது 19). இவர் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள விழுப்புரம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து தீனதிரிஷா கல்லூரிக்கு சென்றார். உணவு இடைவேளையின் போது மதியம் 12.50 மணிக்கு அவர் கல்லூரியின் 3-வது மாடிக்கு சென்றார். அப்போது அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த தீனதிரிஷா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இது குறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி தீனதிரிஷாவுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல் நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.