
திருப்பூர்,
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற 'மாமன்' திரைப்பட முன்னோட்ட விழாவில் சூரி கலந்து கொண்டார். அப்போது தான் வேலை பார்த்த நிறுவன உரிமையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
பின்னர் பேசிய அவர், ' இங்கு ஒரு பேக்கரியில் தேங்காய் பன் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த தேங்காய் பன் ஒன்றேகால் ரூபாய். அங்கு போகும்போது எவ்வளவு காசு இருக்கிறது, எத்தனை தேங்காய் பன்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக் கொண்டே செல்வேன்.
ஆனால், அங்கு போனதும் டீ மட்டும் குடித்து விட்டு சென்றுவிடலாம் என்று நினைப்பேன். என்னுடன் வரும் நண்பன் தேங்காய் பன் சாப்பிடுவான். என்னை சாப்பிடவில்லையா என்று கேட்பான்.
அதற்கு நான் இங்கு தினமும் மூன்று வேளை வருவோம் அப்படி என்றால் கிட்டத்தட்ட நான்கு ரூபாய்க்கு மேல் செலவாகிவிடும். அதனால் வீட்டிற்கு பணம் அனுப்பும்போது குறையும் என்று வேண்டாம் என்பேன். ஆனால், இன்று அதே ஊரில் தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்ததுபோல் இருக்கிறது' என்றார்.