சேலம்: சேலம் அருகே ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டியிட்ட விவகாரத்தில் டிரைவர் கொலையானார். அவரை தீர்த்து கட்டியது ஏன்? என்ற புதுத்தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் வீராணம் பக்கமுள்ள வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் குமரவேல். டிரைவரான இவர் நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல ரவுடி பிரகாஷ், அவரது கூட்டாளிகள் மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை வீராணம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தகாத உறவு விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. தற்போது இக்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
வீராணம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (42). இவருக்கும் தாதகாப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தியின் தவறான நடவடிக்கையால் ரமேஷ் பிரிந்து சென்று விட்டார். வசந்தி, ஏலச்சீட்டு நடந்தி வந்ததால் கைநிறைய பணம் இருந்தது. இதனால் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அப்போது பலருடன் வசந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் கொலையான குமரவேலின் தந்தை மோகனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் குமரவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தந்தை, மகன் என அவர் ஜாலியாக இருந்து வந்தார். அந்நேரத்தில் குமரவேலுக்கு திருமணமும் நடந்தது. என்னுடன் இருக்க வேண்டுமானால், மனைவியை விட்டு பிரிந்து வா என குமரவேலுக்கு வசந்தி ஆசைவார்த்தை கூறினார். இதனால் தாலி கட்டிய மனைவியை ஒரு மாதத்திலேயே விரட்டி விட்டு, வசந்தியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார். கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் குமரவேலுவும் வசந்தியே என் வாழ்க்கை என மூழ்கினார்.
இதனிடையே வசந்திக்கும் ரவுடி பிரகாசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். என்றாலும் இவரால் வசந்தியை மறக்க முடியவில்லை. கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பதோடு, நகையும் வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளார். இதனால் வசந்தியை பிரகாஷ் திருமணமும் செய்து கொண்டுள்ளார். ‘வசந்தியால் தானே கட்டிய மனைவியை விரட்டி விட்டேன். இப்போது என்னை எறிந்துவிட்டு, பிரகாசுடன் சென்றுவிட்டாளே’ என குமரவேல் மிகுந்த வேதனை அடைந்தார். தனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டாளே என அவர் குமுறினார். குமரவேலும், வசந்தியும் மிகவும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோ குமரவேலுவிடம் இருந்தது. அதே நேரத்தில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் டிபியில் வைத்துள்ளார்.
இதனை பார்த்த வசந்தியும், பிரகாசும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக படத்தை எடுத்துவிடு என வசந்தி கூறியுள்ளார். பிரகாசும் மிரட்டினார். ‘உன்னால் தானே என் வாழ்க்கையே போனது. தற்போது நடுரோட்டில் நிற்கிறேன்’ என வசந்தியிடம் குமரவேல் குமுறியுள்ளார். ‘என்னிடம் இருக்கும் வீடியோவை நான் அழிக்க மாட்டேன் என உறுதியுடன் கூறியதுடன், நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக வெளியிடுவேன்’ எனவும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த வசந்தி, ரவுடி பிரகாசிடம் கூறி, ‘தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் குமரவேலை தீர்த்துகட்டினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்’ என கூறியுள்ளார். இதையடுத்து குமரவேலை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரகாஷ், நண்பர்கள் 2 பேரை அழைத்து சென்று, சமயம் பார்த்து குமரவேலை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு சென்ற ரவுடி பிரகாஷ், அதனை அங்குள்ள கிணற்றில் வீசியுள்ளார். இவ்வாறு பிரகாஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரகாஷ், கள்ளக்காதலி வசந்தி, மாணிக்கம், கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போனை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இந்த கள்ளக்காதல் இருந்துள்ளது. மருதமலை சினிமாவில், ஒரு பெண்ணுக்கு 5 பேர் போட்டி போடுவார்கள். இவருக்கு முன்னால, அவருக்கு பின்னால என அப்பெண் வடிவேலுவிடம் கூறுவார். அதே போல வசந்தியின் வாழ்க்கையும் அமைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
The post ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டினார்; தகாத உறவு காதலனை ரவுடியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி; சினிமாவை மிஞ்சும் கள்ளக்காதல்; பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.