
தர்மபுரி,
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபிணி அணைக்கு தற்போது சுமார் 26 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அந்த அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அந்த அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழா எல்லையை வந்தடைந்த நிலையில், தற்போது ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேன்க்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும், ஒகேனக்கல் பிரதான அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.