ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடி: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை

3 hours ago 1

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 40,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த மாதம் நிரம்பிய நிலையில், அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 60 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது மதியம் 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 40,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 58,500 ஆக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 58,500 கனஅடியாகஇருந்த நிலையில் காலை 9 மணிக்கு 40,500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,200 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 3வது நாளாக 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

The post ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடி: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article