மும்பை: பிசிசிஐ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகமான வருவாய் ஈட்டும் டி.20 லீக் தொடராக ஐபிஎல் விளங்குகிறது. அதன்படி 18வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியுடன் 18வது சீசன் ஐபிஎல் தொடங்குகிறது.இதில், பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரேப்பர் மற்றும் பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோர் இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த 13 இடங்களிலும் முதல் போட்டிக்கு முன்தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்படுவது இது முதல் முறையாக இருந்தாலும், ஐபிஎல் 2017 தொடரின் 10வது சீசனின் போது 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அந்த 8 மைதானங்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் நடைபெறும் தொடக்க விழாவில் ஐசிசி தலைவர் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர்பின்னி மற்றும் நிர்வாகள் கலந்துகொள்கின்றனர்.
The post ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13 இடங்களில் தொடக்க விழா: பிசிசிஐ அதிரடி திட்டம் appeared first on Dinakaran.