ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் பயணச்சீட்டுகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்: நிறுவனம் தகவல்

3 days ago 4

சென்னை, மார்ச் 27: ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகிற மார்ச் 28, 2025ம் தேதி நடைபெற உள்ள “ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 மற்றும் 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

The post ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் பயணச்சீட்டுகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்: நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article