
ஐக்கிய அரபு அமீரகம்,
கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு சட்டத்தின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
அவர்களில் ஒருவர் முகமது ரினாஷ் அரங்கிலொட்டு என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மற்றொருவர் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில். இதில், அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், முகமதுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில், முரளீதரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் உச்சபட்ச கோர்ட்டு என கூறப்படும், கோர்ட்டு ஆப் கேஸ்ஸேசன் இந்த தண்டனையை உறுதி செய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. எனினும், அது பலனளிக்கவில்லை.
இந்த தண்டனை பற்றிய விவரங்கள் தொடர்புடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் இறுதி சடங்கிற்காக, அவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.