ஐ.பி.எல்.: வித்தியாசமான சாதனையில் 2-வது வீரராக இணைந்த சூர்யகுமார் யாதவ்

2 weeks ago 2

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் அடித்தனர்.

நடப்பு தொடரில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதில் 373 ரன்கள் குவித்து அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 9 போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக முறை 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற வித்தியாசமான சாதனை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2014-ம் ஆண்டு நடந்த சீசனில் 10 முறை தொடர்ச்சியாக 25+ ரன்கள் அடித்து ராபின் உத்தப்பா முதலிடத்தில் உள்ளார். 

Read Entire Article