
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ், ஆவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் புகுந்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இது ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் 150-வது வெற்றியாக பதிவானது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற வரலாற்றை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.
இந்த பட்டியலில் 2-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்சும் (140 வெற்றிகள்), 3-வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் உள்ளது.