
சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் 70 ஆட்டங்கள் கொண்ட லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று நாளை தொடங்க உள்ளது.
அதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் நடைபெறும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் 2-வது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு.
இதனையடுத்து 30-ந் தேதி இரவு 7.30 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பின்னர் ஜூன் 1-ந் தேதி நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும்,குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியும் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
ஜூன் 3-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.