
ஜெய்ப்பூர்,
நடப்பு ஐ.பி.எல். தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒருவார காலம் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்த நிலையில் ஐ.பி.எல். மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று பெங்களூரு - கொல்க்கத்தா ஆட்டம் மழையால் தடைபட்டது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 59 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பஞ்சாப் பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.