
லாகூர்,
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
அதன்படி தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் பாகிஸ்தான் இதுவரை 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று முதல் அணியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது.
இதனால் கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் பாகிஸ்தான் அணி தற்போதே தகுதி பெற்றுள்ளது.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு வங்காளதேசம், ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.