
புதுடெல்லி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புதுடெல்லியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஈஸ்ட் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
இதன் காரணமாக அந்த அணி 3-0 என முன்னிலை பெற்றது. பதில் கோல் திருப்ப பஞ்சாப் அணியினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதன் காரணமாக ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பஞ்சாப் தனது முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் எப்.சி. கோவா - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் ஆடி வருகின்றன.