
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான 'ஏஸ்' ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'ஏஸ்' படம் மே 23ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'ஏஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி "யோகிபாபுதான் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என கூறுவேன். அவரின் சிந்தனையை நினைத்து ஆச்சரியப்படுவேன். இத்தனை படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்படி உழைக்கிறார். படத்தின் டப்பிங் நேரத்தில் கூட காட்சியை மேம்படுத்த முயற்சி செய்வார். இந்த படத்தின் முக்கிய தூண் என்றால் அது யோகிபாபு தான். சமீபத்தில் யோகி பாபு பற்றி சில செய்திகளை கேள்வி பட்டேன். அவரிடம் பழகியதை வைத்து கூறுகிறேன் அவர் அப்படி பட்ட மனிதர் கிடையாது" என்றார்.