
புதுடெல்லி,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ.ஐ.-171 என்ற எண் கொண்ட, போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஒன்று புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்தில் சிக்கியது. இதில், விமான பயணி ஒருவரை தவிர மீதமிருந்த 241 பயணிகள் உள்பட 270 பேர் வரை பலியானார்கள்.
இந்த விவகாரம் பற்றி விமான விபத்து புலனாய்வு துறையின் இயக்குநர் ஜெனரல் ஜி.வி.ஜி. யுகந்தர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆயுதம் ஏந்திய 3 முதல் 4 வீரர்கள் அவருடைய பாதுகாப்புக்கு செல்வார்கள்.
அவர் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.