சென்னை : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ.327.69 கோடி செலவில் கட்டப்படவுள்ள 2404 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களின் நிறைவு பெற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் ரூ.8.58 கோடி செலவில் கட்டப்பட்ட 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், ரூ.7.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
சென்னை எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1250 கிராம கோயில்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர் கிராமத்தில் 1250 கோயில்களில் திருப்பணிகளுக்காக ரூ. 62.50 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரூ.15.43 கோடியில் கட்டப்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணைகள் உட்பட 10 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நெல்லை மாவட்டம் கூடுதாழையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
The post எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் : கால்நடை தீவன தொழிற்சாலையை திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.