
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., பட்டப்படிப்புக்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியான 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 27-ந்தேதி வெளியிடப்பட்டது.
தரவரிசை பட்டியல் குறைகளுக்கு நிவர்த்தி காண மாணவர்கள் சேவை மையங்களை அணுக ஜூன் 28-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை குழு அவகாசம் வழங்கியது. கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், தரவரிசை பட்டியல் தொடர்பாக முறையிட்ட மாணவர்களில் 93 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றிருப்பதாக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்திருக்கிறது. இதன்மூலம், ஏற்கனவே கடந்த 27-ந்தேதி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலுடன் மேலும் 93 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளனர்.