
டுனெடின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி டுனெடினில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அளித்த பேட்டியில் கூறியதாவது,
காற்றின் தாக்கத்துக்கு மத்தியிலும் எங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆடுகளத்தில் பந்து அதிகமாக பவுன்சானது. கடைசி கட்ட பந்து வீச்சாளர்களும் துல்லியமாக பந்து வீசினார்கள். எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.