சென்னை: “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்று மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏற்றமிகு தமிழகத்தை உருவாக்க, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் முன்னோடி திட்டமான முதல்வர் காலை உணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும், இளம் சிறார்களுக்கு இணை உணவுகள் வழங்கும் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தமிழக மாணவர்களுக்கும் , மழலைச் செல்வங்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தமிழக அரசால் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது.