சென்னை: சபாநாயகர் அப்பாவுவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஈரோடு மாவட்டச் செயலாளருமான செங்கோட்டையனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலின்போது இருவருக்கும் வேட்பாளர் அறிவிப்பில் மோதல் ஏற்பட்டது. தன்னை கேட்காமல் திருப்பூர், ஈரோடு வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி, அறிவித்து விட்டதாக செங்கோட்டையன் கடும் கோபத்தில் இருந்தார்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சார்பில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் மீண்டும் உருவானது. அப்போது முதல் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரையே செங்கோட்டையன் கூறுவதை தவிர்த்து வந்தார். அவரது கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் போடாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அதேநேரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும்போது, செங்கோட்டையன் மட்டும் வெளியில் செல்லாமல் இருந்தார். எம்எல்ஏக்கள் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், இன்றும் செங்கோட்டையன் சபாநாயகருடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியுடன், செங்கோட்டையன் மோதிவரும் நிலையில் சபாநாயகரை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதல் எதிரொலி: சபாநாயகர் அப்பாவுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.