சென்னை: உளுந்தூர்பேட்டை கூவாகம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஆவிகொளப்பாக்கம் குறுவட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் கண்மணி தம்பதியரின் மகள் செல்வி ஜெயலெட்சுமி (வயது 10) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டம், டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் சினேகா தம்பதியரின் மகன் செல்வன் நித்தேஷ் (வயது 5) ஆகிய இருவரும் நேற்று (3.5.2025) மதியம் சுமார் 2.00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூவாகம் ஏரியில் தவறி விழுந்து மேற்படி சிறுவனும், சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
The post உளுந்தூர்பேட்டை கூவாகம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.