சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு, தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2025-26ம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இப் படிப்பை பயில விரும்புவோர் www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்பில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் தமிழ்நாடு அரசால் ரூ.2000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் அல்லது அஞ்சலில் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 16.6.2025 சமர்ப்பித்திட வேண்டும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.