
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில், தேவர்மலை நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து அலங்கார ரதத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண மகோத்சவ விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து சீர்வரிசை தட்டுகளும் வைக்கப்பட்டு விழா பந்தல் அருகே சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
பின்னர் மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. தொடர்ச்சியாக ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ஸ்ரீநிவாசா சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்வும், தொடர்ச்சியாக மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்ற பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமிக்கு பால், பழம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த திருக்கல்யாண நிகழ்ச்சி உலக நன்மைக்காக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.