ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை, திருமுல்லைவாயல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). திருமணம் ஆகாத இவர், வேலை செய்யாமல், ஆன்மிகம் மீது நாட்டம் கொண்டு கோயில் கோயிலாக சுற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, உறவினர் ஒருவரின் இறப்புக்கு மாலை வாங்க ஆவடி மார்க்கெட்டிற்கு விக்னேஷ் வந்துள்ளார். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் மூன்றாவது இருப்புப் பாதையை அவர் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது.
ரயில் வருவதை விக்னேஷ் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
The post உறவினர் இறப்புக்கு மாலை வாங்க சென்றபோது ரயில் மோதியதில் வாலிபர் பலி appeared first on Dinakaran.