உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் சாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
14 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோட்டம் கடந்த 8ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 9ம் நாளான நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா மகா உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து, கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருடன், அம்பாள், விநாயகர், முருகன் உட்பட 63 நாயன்மார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் சாமிகளுக்கு தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். விழாவையொட்டி வீதி எங்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின்போது, பாண்டிச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மங்கள கவுரி வடிவேலு உட்பட பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post உத்திரமேரூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் 63 நாயன்மார்கள் வீதியுலா appeared first on Dinakaran.