
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இன்று 'மகி பூர்ணிமா' என்ற சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பகல் 12 மணி வரை திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.60 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பமேளாவில், பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், நடிகை கஸ்தூரி இன்று தனது மகனுடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். கும்பமேளாவில் புனித நீராடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.