
மகோபா,
உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் சதீஷ் மவுரியா (வயது 68). இவருடைய மனைவி ஊர்மிளா மவுரியா (வயது 56). இந்த தம்பதியின் மகன் ஹர்திக் மவுரியா (வயது 33). ஹர்திக்கின் மனைவி மோகினி கனவுஜியா (வயது 32).
இவர்கள் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜிந்த் என்ற சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பினர். அப்போது, மகோபா மாவட்டத்தில் பரிபுரா கிராமத்தில் கப்ராய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கான்பூர்-சாகர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, அவர்களுடைய கார், லாரி ஒன்றின் மீது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், சதீஷ், அவருடைய மனைவி, மருமகள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஹர்திக்கிற்கும் காயமேற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மகோபா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், ஹர்திக் தவிர அனைவரும் உயிரிழந்து விட்டனர். ஹர்திக்கிற்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜான்சி மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.