
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் 5 வயது சிறுமிகள் 2 பேர் வேறு வேறு இடங்களில் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் காமியாபூர் பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர் என்ற பட்டார். அணை அருகே குடிசை பகுதியில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில், 5 வயது சிறுமியை புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
அடுத்த நாள் காலையில் சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் புகார் அளித்தனர். அப்போது, சிறுமி ரத்தம் வழிய வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். இதில் இன்று காலை லக்னோ நகரில், போலீசாரை பார்த்ததும் பைக்கில் தப்ப முயன்றபோது, தவறி விழுந்துள்ளார்.
அவரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது, துப்பாக்கியால் கமல் சுட்டுள்ளார். பதிலுக்கு போலீசார் சுட்டதில், அந்நபரின் காலில் காயம் ஏற்பட்டது. அவரை கைது செய்தனர்.
இதேபோன்று புலந்த்சாகர் பகுதியில், 6 வயது சிறுமியை ரவீந்திரா என்பவர் நேற்று பலாத்காரம் செய்துள்ளார். அவரை குர்ஜா திகாத் காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை போலீசாருடனான என்கவுன்டரில் காயமடைந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதன்பின்பு அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் வீடு அருகே விளையாடிய 5 வயது சிறுமியை, அந்த வீட்டின் அருகே உள்ள கோவிலுக்குள் வரும்படி கூறி வாலிபர் ஒருவர் சிறுமியை, அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றிய சி.சி.டி.வி. வீடியோ ஒன்று வைரலான நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பொய்யான தகவலால் விடுவிக்கப்பட்ட அவர், வீடியோவை தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டார்.