
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். விஜய்யின் இந்த திட்டம் மாணவ, மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டி வருகிறது.
விஜய் கையினால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகள் பலர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2025-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கிறது. பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களுக்கு உள்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளும், மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பங்கேற்க இருக்கின்றனர். விழாவில் சுமார் 2,000 பேர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விழாவுக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. விழா அரங்கிற்குள் செல்போன், பேப்பர், பேனா மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை சரியாக 9 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்கப்படுத்தி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் பரிசு வழங்கி விஜய் கவுரவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்கத்தொகை, விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பரிசு பெற இருக்கும் 600 மாணவ, மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்த இருக்கிறார். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது.
2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடக்கிறது.