ஈரோடு, மே 14: ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் குவிந்ததால், சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதே நேரத்தில் வெளி மாநில வியாபாரிகள் போதியளவில் வராததால், மொத்த விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வார சந்தை நடைபெறும். இது தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வாரச்சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது.
கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த 3 வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
அதேநேரத்தில், உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்ததால் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இந்த வார ஜவுளி மார்கெட்டுக்கு உள்ளூர் வியாபாரிகள் வருகை மட்டுமே அதிக அளவில் இருந்தது. இதனால், இந்தவாரம் சில்லரை விற்பனை மட்டுமே 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே சமயம் வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்ததால் மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டன் ரக துணிகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களாக கோயில் விழாக்கள், ரம்ஜான் பண்டிகை, தமிழ் புத்தாண்டு காரணமாக ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. அதன் பிறகு வெளி மாநில வியாபாரிகள் வராததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. அதே சமயம் பொதுமக்கள் பலர் வந்து துணியை வாங்கிச் சென்றனர். குறிப்பாக, காட்டன் ரக ஆடைகளின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மொத்த வியாபாரத்தை விட சில்லறை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தற்போது காட்டன் பனியன்கள், ஜட்டிகள் விற்பனை அமோகமாக உள்ளது. அதேபோன்று, காட்டன் ரக சுடிதார்கள் நைட்டிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. அடுத்த மாதம் பள்ளிகள் தொடங்க இருப்பதால் வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் சில்லறை விற்பனை விறுவிறுப்பு: வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை மந்தம் appeared first on Dinakaran.