ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

2 weeks ago 4

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது.

விடுமுறை தினங்களை தவிர்த்து கடந்த 10 மற்றும் 13-ந்தேதி என 2 நாட்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த 2 நாட்களில் 9 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை அவர் சமர்ப்பித்தார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனு வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Read Entire Article