![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36394392-chennai-15.webp)
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கணினி முறையில் ஆணைய இணையதளத்தின் மூலம் கடந்த 13-ந்தேதி அன்று 20 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் 30 சதவீதம் வி.வி.பேடு கருவி சேர்த்து தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 284, கட்டுப்பாட்டு கருவி 284, வி.வி. பேடு கருவி 308 கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி துணை சுழற்சி முறையில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 852 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலையொட்டி 852 வாக்குப்பதிவு எந்திரங்களில் பெயருடன் கூடிய சின்னம் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் இந்தப் பணி நடைபெறுகிறது.