![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38932672-1.webp)
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் அருகே பட்டல் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உட்பட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்ற தகவலை இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர் உறுதிசெய்தனர். எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடைபெற்ற 3-வது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணிவெடியை பதுக்கி வைத்த பயங்கரவாதிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.