
சென்னை,
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலின் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகள் அருகே வான் எல்லை மூடப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம், அரபிக்கடல் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது பாதியிலேயே திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் வான் எல்லை திறக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.