
தெஹ்ரான்:
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.
நேற்று முன்தினம் இந்த துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பலர் நெருப்பில் சிக்கிக்கொண்டனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அடுத்தடுத்து பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் இதனை ஈரான் ராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது.