சென்னை: ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வழிப் பகுதிகள் மூடப்பட்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டை தலைமையகமாக வைத்து இயங்கி வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி உள்ளது.
இதையடுத்து, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11.45 மணியளவில் மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 1 மணியளவில் அபுதாபி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.55 மணியளவில் தோகா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 4.20 மணியளவில் தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.35 மணியளவில் துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் என 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் தோகாவில் இருந்து நேற்று அதிகாலை 2.50 மணியளவில் சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 2.50 மணியளவில் தோகாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.55 மணியளவில் குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.20 மணியளவில் குவைத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.25 மணியளவில் அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் தாய்லாந்து நாட்டில் இருந்து தோகாவுக்கு சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின. லண்டன், பக்ரைன், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
The post ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் சென்னையில் 11 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.