டெல் அவிவ்: ஹமாஸ் சில விஷயங்களில் பின்வாங்குவதால் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் போராளிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் உட்பட 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 15 மாதமாக போரிட்டு வருகிறது. இதில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தினம் தினம் பல பாலஸ்தீனர்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த சூழலில் போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார், அமெரிக்கா தலைமையில் இஸ்ரேல், ஹமாசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பணயக்கைதிகளை விடுவிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. அதன்படி 3 கட்டமாக படிப்படியாக போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக 6 வாரத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் ஹமாஸ் வசமுள்ள 100 பணயக் கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக இஸ்ரேல் தனது சிறையில் அடைத்துள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். மேலும், காசாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டும்.
இதன் மூலம், காசாவில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல வழிவகுக்க வேண்டும். காசாவில் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். காசா, எகிப்து இடையேயான பிலிடெல்பியா எல்லையிலிருந்து இஸ்ரேல் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து 2ம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்தின் 16வது நாளில் தொடங்கப்படும். இதில் மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறுவது குறித்து விவாதிக்கப்படும். 3வது மற்றும் கடைசி கட்டமாக போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதில் முதல் கட்ட ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புக் கொண்டதாக அமெரிக்காவும், கத்தாரும் நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியிட்டன. இதன்படி 6 வார கால போர் நிறுத்தம் வரும் 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனை இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலக நாடுகளும் ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும் வரவேற்றன. ஹமாஸ் அதிகாரி இஸ்ஸாத் அல் ரிஷேக் டெலிகிராம் பதிவில், கத்தார், அமெரிக்காவில் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தார். காசா மக்களுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றனர். இதனால், 15 மாதத்திற்குப் பிறகு காசாவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குழப்பத்தை ஏற்படுத்தினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்காமல் பின்வாங்கியதாகவும், அவர்கள் சில கடைசி நிமிட சலுகைகளை எதிர்பார்ப்பது ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிப்பதை தடுப்பதாகவும் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவையை அவர் கூட்டவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை என்றும் அவர் கூறி உள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது. ஒப்பந்தத்தில் எந்த அம்சத்தையும் பின்வாங்கவில்லை என ஹமாஸ் மூத்த தலைவர் சமி அபு ஜூரி கூறி உள்ளார்.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவானதாக அறிவிக்கப்பட்ட பிறகும் இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் நேற்று குண்டுமழை பொழிந்தன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பைடன், டிரம்ப் போட்டாபோட்டி
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது தங்களின் முயற்சியால்தான் என அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பைடனும், புதிய அதிபர் டிரம்ப்பும் கூறிக் கொண்டு வருகின்றனர். பதவிக்காலம் முடிவடையும் தருணத்தில் இது மகத்தான வெற்றி என பைடன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனது பதவியேற்புக்கு முன்பாக பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென ஹமாசை டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் இது தனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என டிரம்ப் கூறி உள்ளார்.
மக்கள் எதிர்ப்பால் நெதன்யாகு திணறல்
ஹமாசுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பலியான ராணுவ வீரர்களின் உறவினர்கள் உட்பட பலரும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல வலதுசாரி கட்சி தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை சரணடைவதற்கு சமம் என விமர்சித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் நெதன்யாகுவுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டி உள்ளனர். இதன் காரணமாக பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்.
The post இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடைசி நிமிடத்தில் குழப்பம்; போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை: காசா மீது வான்வழி தாக்குதலில் 80 பேர் பலி appeared first on Dinakaran.