இளையோர்களே கவனம்!

1 day ago 7

நன்றி குங்குமம் தோழி

இளம் வயதினர்தான் வருங்கால இந்தியாவின் சொத்து என்போம். ஆனால் இம்முக்கியத்துவம் வாய்ந்த இளம் பருவத்தில் நம் உடல்நலன் எப்படி இருக்கிறது, நம் மனம் எவ்வகை வாழ்க்கை முறையை தேர்வு செய்கிறது என ஆராய்ந்தால் நமக்கு எஞ்சுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோய் கொண்டிருக்கிறது எனும் உண்மை மட்டுமே.

இருபது வயது முதல் நாற்பது வயது வரை உள்ள இந்திய இளையோர் கூட்டம் உடல்நலனில் செய்யும் தவறுகள் யாது, அத்தியாவசியமான வாழ்க்கை முறை மாற்றங்களாக நாம் செய்ய வேண்டியவை என்ன, இதில் இயன்முறை மருத்துவத்தின் பயன் என்ன என்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

தினசரி பழக்க வழக்கங்கள்…

நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் உடலியல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நாம் செய்யும் தவறுகள்தான் நமக்கு பல நோய்களையும், சிக்கல்களையும் தருகிறது என உணர்ந்தாலே போதும் முக்கால்வாசி நோய்களுக்கு ‘குட்- பை’ சொல்லிவிடலாம். அதிலும் குறிப்பாக…

1. தினசரி காலை உணவினை தவிர்ப்பது. உணவு இடைவெளிகளை சுருக்கிச் சுருக்கி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உண்பது.
2. தவறான புரிதல்களுடன் உணவினை உண்பது. உதாரணமாக, பழங்களில் நல்ல சத்து உள்ளது என தினசரி காலை உணவாக பழங்களை மட்டுமே உண்பது.
3. வார இறுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து நிறைய உணவுகளை சுவைத்துப் பார்க்கிறேன் என அளவுக்கு அதிகமாக உண்பது.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்த்த உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள், பேக்கரி தின்பண்டங்கள் என அடிக்கடி உண்பது.
5. சூரிய ஒளி தன் மேல் படாமல் இருப்பது.
6. தினசரி குறைந்த அளவில் நீர் அருந்துவது.
7. குறைந்தது தினமும் ஏழு மணி நேரம் தூங்காமல் இருப்பது.
8. எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.
9. எந்நேரமும் தொலைபேசியில் மூழ்கி இருப்பது.
10. அதிகப்படியாக மது அருந்துவது, புகை பிடிப்பது… என நாம் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என நினைத்து செய்யும் சிறு தவறுகள்தான் பெறும் விளைவுகளை உருவாக்குகிறது
என்பதை உணர வேண்டும்.

புள்ளிவிவரக் குறிப்புகள்…

*உடல் உழைப்பில் ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

*87% இளம் பெண்கள் உலக சுகாதார அமைப்பு கூறிய ‘உடல் உழைப்பின் அளவை’ தொடாமல் இருக்கிறார்கள். மேலும் இளம் ஆண்கள் இதில் 75% இருக்கின்றனர்.

*ஒரு நாளைக்கு சராசரியாக முப்பது நிமிட நேரம் கூட போதுமான உடல் உழைப்பு இல்லாமல் 60 சதவிகிதம் இளம் பெண்கள் இருக்கிறார்கள்.

*இருபது சதவிகித இளம் பெண்கள் எந்தவித உடல் உழைப்பும் ஒரு சதவிகிதம் கூட செய்யாமல் இருக்கின்றனர்.

*அதிக அளவில் உடல் உழைப்பு செய்யும் ஆண்களுக்கு எந்தவித நற்பயன்கள் விளைகிறதோ அதே அளவு பயன் குறைவான அளவில் செய்தாலே பெண்களுக்கும் நற்பயன்கள் விளைகிறது என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

*பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 41% இறக்கும் விகிதம் அதிகம். முதல் காரணம், பெண்களை ஹார்மோன்கள் (Hormones) பாதுகாக்கிறது. இரண்டாவது, மது, புகை, போதை, மன அழுத்தம் போன்ற பழக்க வழக்கங்கள் ஆண்களில் ஆயுள் குறைய காரணமாக அமைகிறது.

*இந்திய சூழலில் ஆண்கள் தங்கள் மனசங்கடங்களை வெளியே சொல்வதில்லை என்பதால், நிகழ்காலத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
*சரி பாதி அளவு தம்பதியர் மலட்டுத்தன்மையாலும், குழந்தையின்மையாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் ஆண்களின் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நிகழும் விளைவுகள்…

*பெண்களுக்கு பி.சி.ஓ.டி பிரச்னை, கருப்பை ஹார்மோன்கள் விகிதம் சரி இல்லாததால் நிகழும் மாதவிடாய் கோளாறுகள்.

*புற்றுநோய் இளம் வயதில் ஏற்படும் அபாயம்.

*ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது. முக்கியமாக, இரும்புச்சத்து குறைபாடு.

*உடல் அளவில் தினசரி அடிப்படையில் எளிதில் அயற்சி (Tired) ஆவது.

*இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஏற்படுவது.

*தைராய்டு சுரப்பதில் பிரச்னை உண்டாவது.

*ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை.

*அதிக கெட்டக் கொழுப்பு சேர்வதும், இளம் வயதிலேயே ரத்த நாளங்களில் அதிக கொழுப்பு படிவதும்.

*முப்பத்தைந்து வயதிற்கு முன்பாகவே இதய அடைப்பு, பக்கவாதம் வருவது.

இயன்முறை மருத்துவம்…

தினசரி உடற்பயிற்சிகள் செய்வதாலும், வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதாலும் மேலே சொன்ன பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்பதால், அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உரிய முறையில் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்வது அவசியமாகும்.ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியம் பொருத்தும், தசை ஆரோக்கியம் மற்றும் தேவை பொருத்தும் உடற்பயிற்சிகளை அவர்கள் வடிவமைத்துத் தருவர்.

உடற்பயிற்சியின் பலன்கள்…

*உடற்பயிற்சிகள் செய்வதால் தீய பழக்கங்களில் இருந்து எளிதில் தப்பி விடுபடலாம் அல்லது அதனை குறைத்துக் கொள்ளலாம். உதாரணமாக மது அருந்துவது.

*தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்பவர்கள் தானாகவே சுய ஒழுக்கம் கடைபிடித்து உணவு விஷயத்தில் தேர்வு செய்து உண்பர். அப்படியே தேவையற்ற உணவுகளை உண்ணும் போதும் அளவுடன் இருப்பர்.

*தினசரி நல்ல உறக்கம் கிடைப்பதோடு தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தாங்களாகவே சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கத்தையும் கடைபிடிப்பர்.

*உடற்பயிற்சிகள் செய்வதால் மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்க முடியும்.

*பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் படிப்படியாய் குணமடையும்.

*உடலின் சரியான எடையை பராமரிக்க உடற்பயிற்சிகள் உதவும்.

*தசை வலிமை அதிகமாவது, தசை அடர்த்தி அதிகமாவது.

tஉடலில் எந்த மூட்டும் வலி இல்லாமல் ஆரோக்கியமாய் இருப்பது. எனவே நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் ஓர் இளையோர் இருக்கிறார்கள் என்பதால், அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி வருங்கால இந்தியாவை வளம் பெறச் செய்திடுவோம்.

 கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

The post இளையோர்களே கவனம்! appeared first on Dinakaran.

Read Entire Article