இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்

3 weeks ago 4

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் இக்கடிதம் வாயிலாக குறிப்பிடுகிறேன். அந்தவகையில், நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் 2 மீன்பிடிபடகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவது, மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம். அதேபோல், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராகிய நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என இக்கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article