மாமல்லபுரத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு

3 hours ago 1

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ₹90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணியினை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் உலக அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. மாமல்லபுரத்திற்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் சொகுசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் குடைவரை மண்டபங்கள், கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் ஆகியவற்றை பாறைகளை குடைந்து அழகுர செதுக்கினர். அவைகள் உலக புகழ் வாய்ந்த பாரம்பரிய நினைவு சின்னங்களாக யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. பல்வேறு, சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில் இன்னும் நவீன பேருந்து நிலையம் அமைக்கவில்லை. தற்போது, தலசயன பெருமாள் கோயில் நுழைவு வாயில் பகுதிக்கு இடது மற்றும் வலது புறம் என குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியாக பேருந்து நிலையமாக கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த, குறுகிய பேருந்து நிலையத்துக்கு 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இங்கு, ஒரே நேரத்தில் சென்னை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வருகை தருகின்றன. ஆனால், இப்பேருந்துகளை நிறுத்த இங்கு போதிய இடவசதி இல்லை. இதனால், சாலையை மறித்து பேருந்துகள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி வெளியே செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1992ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளது போல் ஒரு நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. பின்னர், மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயிலுக்கும் இசிஆர் சாலைக்கும் இடைபட்ட பகுதியில் சுமார் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த, 2006-2011 வரை தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஊருக்கு வெளிப்புற பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ₹18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றிய பொதுப்பணித் துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. பின்னர், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அங்கிருந்த கருவேல மரங்கள், வேலிகாத்தான் மரங்கள், செடி, கொடிகள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. அதன்பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு டெண்டர் விட்டு ஒதுக்கப்பட்ட ₹18 கோடியை ஒன்றிய பொதுப்பணி துறை மீண்டும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. கடந்த, 2020ம் ஆண்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் நேரில் வந்து அங்கு மண் பரிசோதனைளும் மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு உகந்த இடம் என சான்றிதழும் பெற்றனர்.

இதனையடுத்து, அடிக்கடி, மாவட்ட கலெக்டர், சிஎம்டிஏ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்களே தவிர, பணிகள் தொடங்குவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு சிஎம்டிஏ அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என உறுதியளித்தனர். ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை தடை காரணமாக பணிகள் தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில், 2 ஆண்டுக்கு முன்பு சென்னை பெருநகர வளர்ச்சி மானியக் கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்ட மன்றத்திலேயே வெட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், கோரிக்கைக்கு செவி சாய்த்து ₹90.50 கோடி நவீன பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு செலவிடப்படும் என்றார். இந்நிலையில், ₹90.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன், வெளிநாடுகளில் உள்ளது போன்று நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்தாண்டு பிப்ரவரி 27ம் தேதி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து, கடந்த மார்ச் 13ம் தேதி பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. பின்னர், கனமழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியதால் கட்டுமானப் பணி தடைபட்டது. இந்நிலையில், தற்போது அங்கு நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் அங்கே கூடாராம் அமைத்து இரவு-பகலாக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணியை, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அதிநவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 33 ஆண்டுகளாக எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்க ₹90.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும், செப்டம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.

The post மாமல்லபுரத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு appeared first on Dinakaran.

Read Entire Article