இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி

2 months ago 11

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த வா.புகழேந்தி கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்து நிலுவையில் இருந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகழேந்தியின் மனுவை விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு அப்போது உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வழக்கை பரிசீலனை செய்த நீதிபதி, ‘‘அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்’’ என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.

The post இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article