
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கரை பகுதியைச் சேர்ந்த ரூபன் (வயது 26), வேன் டிரைவர். இவர் இன்ஸ்டாகிராமில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வசப்படுத்தி உள்ளார். இதை நம்பிய இளம்பெண் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என இளம்பெண்ணை ரூபன் அழைத்துள்ளார். அவரை நம்பிய இளம்பெண் கடந்த 7-ந் தேதி திருவண்ணாமலை நாவக்கரை பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது தனியாக சென்று பேசலாம் எனக்கூறி அங்குள்ள சுடுகாட்டுக்கு ரூபன் அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வந்திருந்த ரூபனின் நண்பரான தனுஷ் (20) என்பவருடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரூபன், தனுஷ் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் காதலியை நண்பனுடன் சேர்ந்து காதலன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.