இன்ஸ்டாகிராமில் அதிகம்பேர் பின்தொடரும் ஐ.பி.எல். அணி; சி.எஸ்.கே-வை முந்திய ஆர்.சி.பி

1 day ago 3

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.

அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐ.பி.எல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது. அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article