
சென்னை,
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு ரூ.56,960-க்கு விற்பனையானது
இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.56,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.